Published : 05 Jan 2014 04:10 PM
Last Updated : 05 Jan 2014 04:10 PM

ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் :5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவைத் தேர்தலை ஏப்ரல் பிற்பாதியில் தொடங்கி மே தொடக்கம் வரை ஐந்து கட்டங்களாக நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே மக்களவை பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

80 கோடி வாக்காளர்கள்

தற்போது வாக்குச் சாவடி களைத் தேர்வு செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக குறைந்தபட்சம் சுமார் 8 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்குப்பதிவின்போது சுமார் ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதேபோல் அந்தந்த மாநில காவல் துறை தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தீவிரவாதம், நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

12 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவுக்காக தற்போது 12 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. எனினும் கூடுதலாக இயந்திரங்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் புதிதாக மின்னணு இயந்திரங்கள் தயாரிக் கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் இருந்து பிப்ரவரி பிற்பாதியில் மேலும் 2.5 லட்சம் இயந்திரங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்

கடந்த 2009 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டன. மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. முன்னதாக தேர்தல் தேதிகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

தற்போதைய மக்களவைத் தேர்தலையும் அதே காலகட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் பிற்பாதியில் தொடங்கி மே தொடக்கம் வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் மாநிலங் களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் அறிவிப் புக்கு முன்னதாக 2014-15 இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் ஒருமுறை கூடும். மேலும் ஊழல் தடுப்பு மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டமும் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x