Published : 12 Mar 2017 10:27 AM
Last Updated : 12 Mar 2017 10:27 AM

5 மாநில தேர்தலும் மக்கள் தீர்ப்பும்: உத்தராகண்ட்டில் பாஜக ஆட்சி

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தேதியில் 69 தொகுதியில் மட்டுமே தேர்தல் நடந்தது. கர்ணபிரயாக் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென உயிரிழந்ததால், அங்கு மார்ச் 9-ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு வெறும் 11 இடங்களே கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத் போட்டியிட்ட 2 தொகுதியிலும் தோல்வி அடைந்தார். அத்துடன் சஹாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் கிஷோர் உபாத்யாயும் தோல்வி அடைந்தார்.

மேலும் இங்கு பாஜக அமோக வெற்றி பெற்றாலும், அக்கட்சியின் மாநில தலைவர் அஜய் பட் ரானிக்கெட் தொகுதியில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக் காத ஒருவர் இவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்ட பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் ஹரிஷ் ராவத் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கடந்த 2012 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக ஒரு இடம் மட்டுமே குறைவாக பெற்றிருந்தது. ஆனாலும் பிற கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்தத் தேர்தலில் பாஜக 5-ல் 4 பங்கு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 46.5 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 33.5 சதவீத வாக்குகளும் இடைத்துள்ளன.

புதிய முதல்வர் யார் என்பது குறித்து பாஜக ஆட்சி மன்றக் குழு இன்று முடிவு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஹரிஷ் ராவத் 2 தொகுதியிலும் தோல்வி

உத்தராகண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹரித்வார் (ஊரகம்) மற்றும் கிச்சா ஆகிய 2 தொகுதிகளில் ஹரிஷ் ராவத் போட்டியிட்டார். இதில் ஹரித்வார் தொகுதியில் பாஜக வேட்பாளர் யத்தீஷ்வரானந்திடம் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராவத் தோல்வி அடைந்தார்.

இதுபோல கிச்சா தொகுதியில், பாஜக வேட்பாளர் ராஜேஷ் சுக்லாவிடம் 2,154 வாக்குகள் வித்தியாசத்தில் ராவத் தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலில் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையை பொதுமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்று பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் முன்னா சிங் சவுஹான் நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x