Last Updated : 08 Mar, 2014 12:00 AM

 

Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வெள்ளிக் கிழமை அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இறுதிவாதம் தொடங்கவில்லை. அதனால் 10-ம் தேதி நிச்சயம் இறுதி வாதத்தை அரசு வழக்கறிஞர் தொடங்க வேண்டும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பி.குமார், சசிகலாவின் தரப்பில் வழக்கறிஞர் மணி சங்கர், திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் தரப்பில் தர்மபுரி எம்.பி.யும், வழக்கறிஞருமான தாமரை செல்வன் ஆகியோர் ஆஜராகினர்.

திடீர் உடல்நலக் குறைவு

வெள்ளிக்கிழமை அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டிருந்தார். எனவே அவர் தனது இறுதிவாதத்தை தொடங்குவார் என ஜெயலலிதா தரப்பின் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகவில்லை.

பவானி சிங்கிற்கு பதிலாக அவரது உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் நீதிபதியின் அருகில் சென்று, ''அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது. அவரை மருத்துவர் 5 நாட்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். அதனால் அவரால் நீதிமன்றத்திற்கு வர இயல‌வில்லை. வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்''என கேட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா,''பவானி சிங் எந்த மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்? அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் எங்கே? அவருக்கு எந்த மருத்துவர் சிகிச்சையளிக்கிறார்? அவருடைய முகவரியை கொடுங்கள். மருத்துவருக்கு சம்மன் அனுப்பி,விசாரிக்கிறேன். 5 நாட்கள் எல்லாம் கால அவகாசம் அளிக்க முடியாது.வருகிற திங்கள்கிழமைக்கு (மார்ச் 10- ம் தேதி) ஒத்திவைக்கிறேன். அன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கட்டாயம் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும்''என கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x