Last Updated : 28 Oct, 2014 04:20 PM

 

Published : 28 Oct 2014 04:20 PM
Last Updated : 28 Oct 2014 04:20 PM

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்: லலிதா குமாரமங்கலம்

பாலியல் தொழிலில் சுரண்டலைத் தடுக்க, அதனைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பணி நேரம், சம்பளம், உடல் ஆரோக்கியம், கல்வி மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார மாற்றுகளை வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

மேலும், பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, எச்.ஐ.வி. பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என்கிறார் அவர்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் தெரிவித்தபோது, “பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்பது அந்தத் தொழிலை ஒழுங்கு முறைப்படுத்துவதாகும். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலானோர் கடத்தி வரப்பட்டவர்களாக இருக்கின்றனர். சட்டபூர்வமாக்கினால் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கலாம்.

உதாரணமாக கொல்கத்தாவில் உள்ள சோனாகச்சி பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஒரு கூட்டுறவு ஒழுங்கமைப்பு உள்ளது. ஆனால் சிறிமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வாடிக்கையாளர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கின்றனர். இதனால் எச்.ஐ.வி. நோய் பரவுகிறது. இவற்றையெல்லாம் இந்தத் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் தடுக்கலாம்” என்றார்.

நவம்பர் 8-ஆம் தேதி அமைச்சரவையில் இந்த ஆலோசனையை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் சமூக ஆர்வலர்கள் இவரது இந்த ஆலோசனைகளை ஏற்க மறுத்துள்ளனர்.

"பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது, ஆட்கடத்தல் செய்பவர்களுக்கு மேலும் தைரியத்தையே வழங்கும். எங்கள் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது, பெண்கள் இழிவு படுத்தப்படுகின்றனர், பாலியல் தொழில் பலர் மீது திணிக்கப்பட்டே வருகிறது. இந்தப் பெண்களில் பலர் தாமாகவே மனமுவந்து இந்தத் தொழிலுக்கு வரவில்லை. இவர்கள் பாலியல் சுரண்டல் கும்பலின் ஒரு பகுதி. தரகர்கள் இருக்கின்றனர். தரகர்களே இவர்களை வைத்து பணம் ஈட்டுகின்றனர்.

எனவே பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது இத்தகைய தரகர்களுக்கும், குண்டர்களுக்கும் நாம் உதவுவதாகவே இருக்கும்” என்று பாலியல் தொழிலை எதிர்க்கும் அமைப்பைச் சேர்ந்த சமூக நல ஊழியர் டிங்கு கண்ணா கடுமையாகக் கண்டித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், சமூக நல அமைப்பான சக்தி வாகினியின் தலைவருமான ரவி காந்த் கூறும்போது, “உச்ச நீதிமன்றம் பாலியல் தொழிலை முற்றிலும் அகற்றுவதற்கான அனைத்து பரிந்துரைகளை மேற்கொண்டும் அதனை ஒழிக்க உண்மையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்பதே இதில் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இந்தத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும், மேலும் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைத் தடுத்து குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x