Published : 10 Jan 2014 10:55 AM
Last Updated : 10 Jan 2014 10:55 AM

சென்னையில் சர்வதேச கடல்சார் உணவுப் பொருள்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சர்வதேச கடல்சார் உணவுப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதில், நவீன முறையில் மீன் வளர்ப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, மீன்களை பதப்படுத்துவது தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் கடல் பொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் கடல்சார் உணவுப் பொருள்கள் குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்துகின்றன.

அந்த வகையில், 19-வது சர்வதேச கடல்சார் உணவுப் பொருள்கள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்கவுள்ளது.

இது குறித்து கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் லீனா நாயர், கடல்சார் ஏற்றுமதி=யாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஜே.தரகன், பொதுச் செயலாளர் எலியாஸ் சயித் ஆகியோர் வியாழக்கிழமை கூறியதாவது:

சென்னை நந்தம்பாக்கத்தில் நடக்கவுள்ள 3 நாள் சர்வதேச கடல்சார் உணவுப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தொடங்குகிறது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தொடங்கிவைக்கிறார்.

மேலும் தமிழ்நாடு, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் மீன்வளத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இக்கண்காட்சியில் மொத்தம் 355 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 ஸ்டால்களை அமைக்கின்றன.

இதில், மீன் வளர்ப்பை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகப்படுத்துதல், மீன்களை பதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து நேரடியாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையுடன் வந்தால் ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும்.

இந்தியாவில் கடல்சார் உணவுத் துறை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக 25 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது.

மீன்வளத் துறை மேலும் வளர்ச்சி பெறும்வகையில் பல்வேறு திட்டங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் மொத்தம் 6 லட்சத்து 119 மெட்ரிக் டன் அளவுக்கு கடல்சார் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு ரூ.19,017 கோடியாகும். மேலும் 2014-ல் ரூ.26,660 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x