Published : 31 May 2015 01:53 PM
Last Updated : 31 May 2015 01:53 PM
ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு அரசு விரைந்து தீர்வு காணும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பேசினார்.
அப்போது அவர், "ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு அரசு விரைந்து தீர்வு காணும்.
ஒரே பதவி–ஒரே பென்ஷன் விவகாரத்தில் இதற்கு முந்தைய அரசுகள் ராணுவ வீரர்களின் உணர்வுகளுடன் விளையாடி இருக்கின்றன. பிரச்சினையைப் பற்றி பேச மட்டுமே செய்திருக்கின்றன வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
40 ஆண்டுகளாக பொறுமை காத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், இப்பிரச்சினையில் தீர்வு காண எனக்கு சிறு அவகாசம் தர வேண்டும்.
பாஜக அரசு உங்களுடைய கோரிக்கைக்கு மதிப்பு அளிக்கும் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்" எனக் கூறினார்.
அரசு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் நல்லது:
மேலும் அவர் கூறும்போது, "அரசு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் ஜனநாயகத்துக்கு நல்லது. விமர்சங்களால் நாம் எங்கே பின் தங்கியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். சில நல்ல விமர்சனங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அரசு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT