Published : 30 May 2015 03:55 PM
Last Updated : 30 May 2015 03:55 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா வழக்கை பொறுத்த வரை கர்நாடக அரசுக்கு நிறைய கேள்விகள் இருந்தன.
இது தொடர்பாக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரலிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கு அவரும் (அரசு தலைமை வழக்கறிஞரும்) விளக்கமளித்துள்ளார்.
அந்த விளக்கத்தை அரசு கூர்ந்து ஆராயும். அதன் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எட்டப்படும்" என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கடந்த 11-ம் தேதியன்று (மே-11) விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் வெளிப்படையான கணிதப் பிழைகள் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.
அதேவேளையில், ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு அவசரம் காட்டக்கூடாது என கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT