Published : 14 Oct 2014 04:54 PM
Last Updated : 14 Oct 2014 04:54 PM

‘ஹுத் ஹுத்’ புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி: ஆந்திராவுக்கு ரூ.1000 கோடி நிதி உடனடி ஒதுக்கீடு

ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் ‘ஹுத் ஹுத்’புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானத்தில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆந்திராவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்குவதாக அவர் அறிவித்தார்.

கடலோர ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் சில மாவட்டங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஹுத் ஹுத்’ புயல் புரட்டிப் போட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயநகரம், காகுளம் ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்து 3 நாட்களான பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. கடலோர ஆந்திராவில் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 1.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 1.35 மணிக்கு விசாகப்பட்டினத்துக்கு வந்தார். வழியில் புயல் சேதத்தை பார்வையிட்டார். விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, கஜபதி ராஜு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் புயலால் சீர்குலைந்துள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்தைப் பார்வையிட்டார். பிறகு காரில் விசாகப்பட்டினம் பீச் ரோடு, துறைமுகம், எம்.வி. பி. காலனி உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரே காரில் சென்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் புயல் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புயல் பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

ஹுத் ஹுத் புயல் ஆந்திராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தை ஆந்திர அரசு நன்றாக உபயோகப்படுத்தி கொண்டுள்ளது. இந்த புயல் தாக்கத்தை சமாளித்ததில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை முக்கிய காரணமாகும். அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க விசாகப்பட்டின மக்களும் வெளியே வராமல் சாமர்த்திய மாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டுகிறேன்.

உரிய சமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக்கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர்ச் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்துவிட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் (பொது மக்கள்) தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

உரிய சமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக்கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர்ச் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்துவிட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் (பொது மக்கள்) தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள்,தேசிய நெடுஞ்சாலைகள், கடலோர பகுதிகள், ரயில் வழித்தடங்கள் ஆகியவற்றின் சேதங்கள் குறித்தும், விவசாய சேதங்கள் குறித்தும் விரைவில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் செய்யப்படும். தற்போது ஆந்திர மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியின் கீழ் ரூ.1,000 கோடி வழங்கப்படும். மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப் படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பின்னர் தனி விமானம் மூலம் மாலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x