Published : 24 Jun 2017 01:26 PM
Last Updated : 24 Jun 2017 01:26 PM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கும் நாளில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக பரிசீலனையில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு ஜூன் 23-ம் தேதி மாலையில் கூடி, இதுகுறித்து இறுதி முடிவு எடுத்துள்ளது.
இதன்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை உறுப்பினர் வினோத் கன்னா, மாநிலங்களவை உறுப்பினர் பல்லவி ரெட்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அன்று எந்த விவாதமும் நடைபெறாது.
சற்று முன்னதாகவே தொடங்கும் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு குடியரசு மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதால், சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT