Last Updated : 09 Jan, 2014 12:45 PM

 

Published : 09 Jan 2014 12:45 PM
Last Updated : 09 Jan 2014 12:45 PM

முறைப்படி பாஜகவில் இணைந்தார் எடியூரப்பா: காங்கிரஸை அகற்ற சபதம்

கர்நாடக முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா கட்சித் தலைவரு மான எடியூரப்பா வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

பெங்களூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அதிகாரப் பூர்வமாக‌ முறைப்படி அம்மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வில் இணைந் தார். அப்போது முன்னாள் முதல்வர்கள் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் அனந்தகுமார் ஆகியோர் அவரை வரவேற்று மாலை அணிவித்த‌னர்.

மேலும் எடியூரப்பாவுடன் கர்நாடக ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஷோபா கரந்தலஜே, தனஞ்செய்குமார், சி.எம்.உதாசி, ரேணுகாச்சார்யா ஆகியோரும் இணைந்தனர். இது தவிர க.ஜ.க.வின் 6 எம்.எல்.ஏ.க்களில் யூ.பி.பானகர், விஸ்வநாத் பாட்டீல் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்களும், நூற்றுக் கணக்கான நிர்வாகிகளும் அவ ருடன் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

எடியூரப்பாவுக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவரை மகிழ்விக்கும்வகையில் பட்டாசு கள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

காங்கிரஸை அகற்ற‌ சபதம்

எடியூரப்பா பேசுகையில், ''நான் பா.ஜ.க.வில் மீண்டும் இணைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். கடந்த காலங்களில் நமக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பின்னடைவுகளை சந்தித்தோம். மீண்டும் அதுபோன்ற தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் அரசுகளை அகற்ற சபதம் ஏற் போம்.மோடியை பிரதமர் ஆக்கு வதற்காக முழு மூச்சுடன் ஒன்று பட்டு உழைப்போம்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கர்நாடக மாநில பா.ஜ.க.தலைவர் பிரகலாத் ஜோஷி, ''கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டு வந்த எடியூரப்பா மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது வருகையால் மக்களும் பா.ஜ.க. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்போது கர்நாடகாவில் பா.ஜ.க.வின் பலம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே கருத்துவேறுபாடுகளை மறந்து வெற்றிக்காக பாடுபடு வோம்'' என்றார்.

எதிர்க்கட்சி அந்தஸ்து

எடியூரப்பா தனது எம்.எல்.ஏ.க் களுடன் பா.ஜ.க.வில் அதிகாரப் பூர்வமாக மீண்டும் இணைந்திருப் பதால் பா.ஜ.க.கர்நாடக சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது பதவியை இழப்பார்.

எடியூரப்பா இணைந்தபோதும், அவரது கட்சியைச் சேர்ந்த‌ 2 எம்.எல்.ஏ.க்கள் இணையவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x