Last Updated : 14 Mar, 2017 09:44 AM

 

Published : 14 Mar 2017 09:44 AM
Last Updated : 14 Mar 2017 09:44 AM

அச்சம் ஒழித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் ஆட்டம் தவிர மற்ற விவகாரங்களும் தலைப்புச் செய்தியாகின்றன. அளவுக்கதிகமான பணிவு, தவறே செய்யாமல் மன்னிப்பு கோரும் மனோபாவம் உள்ளிட்டவற்றிலிருந்து இந்திய அணி வெளிவந்து பல ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் மீண்டும் அதை நோக்கித் தள்ளும் நோக்கம் தென்படுகிறது.

தரமான குழுக்களில் பயிற்சிப் பெற்ற, பெரிய குடும்பத்து கிரிக்கெட் வீரர்கள் இருந்தவரை நம்முடைய அணியின் நிலைமை, இப்போதுள்ள வங்கதேச அணியைப் போல (கீழே) இருந்தது. ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலை.கள், இந்து ஸ்டீபன் கல்லூரி ஆகியவற்றில் படித்த ‘நல்ல’ பையன்கள், முன்பெல்லாம் தோற்றுக் கொண்டிருந்தனர். பிறகு ‘இந்தி வழியில்’ கல்லூரியில் படித்த முரட்டுப் பையன்கள் விளையாடத் தொடங்கிய பிறகு, நமது ஆட்டத் திறன் அதிகரித்தது.

1967 வரையில் வென்றது 10

1932 முதல் 1967 வரையில் 100 டெஸ்டுகளில் விளையாடிய இந்தியா, 10-ல் வெற்றி பெற்று, 40-ல் தோற்றது. 2000 முதல் இதுவரை 98 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 8-ல் மட்டுமே பெற்றுள்ள வெற்றி கிட்டத்தட்ட நம்முடைய பழைய சாதனையைப் போன்றதே. அடுத்த 25 ஆண்டுகளில் (1967 1991) நமது வெற்றி சதவீதம் இரட்டிப்பானது. 174 டெஸ்டுகளில் 34-ல் வெற்றி பெற்றோம். அடுத்த 25 ஆண்டு காலத்தில் (1995-2017) இந்த வெற்றி மேலும் இரட்டிப்பானது (39.2%).

முரட்டுப் பயல் கங்குலி

இந்த முன்னேற்றம் ஒரு சுவையான திருப்பத்துடன் தொடங்கியது. இந்திய அணியின் முரட்டுப் பயல் சவுரவ் கங்குலி நவம்பர் 2000-த்தில் கேப்டன் ஆனார். பிறகு நடந்த 177 டெஸ்டுகளில் வெற்றி அதிகரித்தது. அக்கால கட்டத்தில் ஆஸ்திரேலியா (60.6%), தென்னாப்பிரிக்கா (49%) அணிகளுக்கு அடுத்ததாக இந்தியா (43.5%) வந்தது.

கங்குலி காலத்தில் சர்ச்சைகளும் அதிகரித்தது. ஆஸ்திரேலிய அணியை அவர்களுடைய பாணியிலேயே நடத்தினார். லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்றுகொண்டு சட்டையைக் கழற்றிவிட்டு வெற்று மார்போடு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

எம்.சி.சி. கிரிக்கெட் கிளப்பால் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட கவாஸ்கர், அந்நாட்டின் கவுன்டி மேட்சுகளில் விளையாட அழைக்கப்பட்டார். பீர் குடித்துக்கொண்டு சில கிழவர்களும் வெயிலில் காயும் சில நாய்களும் மட்டும் அமர்ந்து பார்க்கும் கவுன்டி போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று துணிச்சலாகக் கூறினார் கவாஸ்கர்.

சமூக மாற்றம்

கங்குலியின் உயர்வின்போதே இந்திய கிரிக்கெட் அணியிலும் சமூக மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கில மீடியத்தில் படிக்காத, ஏன் கல்லூரிக்கே கூட போகாத (சச்சின் டெண்டுல்கர்) இளைஞர்கள் இடம்பெறத் தொடங்கினர். அதன்பிறகு கிரிக்கெட் மேட்சைப் பார்ப்பவர்களுக்கும் அட்ரினலின் வெகுவாக சுரந்தது.

வீரர்களைப் போலவே முரட்டுத்தனமான, நினைத்ததைச் சாதித்துவிட வேண்டும் என்ற வேட்கைமிக்க தொழிலதிபர்களும் பணக்காரர்களும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். இளவரசர்களும் பிரபுக்களும் கோலோச்சிய காலம் மலையேறியது. ஜக்மோகன் டால்மியா, கங்குலி, ஐ.எஸ்.பிந்த்ரா, லலித் மோடி, என்.சீனிவாசன்கள் வந்தனர்.

விஜய் மெர்ச்சென்ட், மாதவராவ் சிந்தியா, ஆர்.பி.மெஹ்ரா, விஜயநகர மகாராஜா போன்ற கனவான்களைப் போல அல்ல இவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணியை வரவேற்பது என்பது அந்நாட்டு அரச குடும்பத்தை வரவேற்பதைப் போல என்று அக்காலத்திய நிர்வாகிகள் கருதினர்.

இப்போதோ எந்த நாடாக இருந்தாலும் முஷ்டியை மடக்கினால் இந்திய வீரரும் பதிலுக்கு மடக்குகிறார். முரட்டுத் தனம் காட்டினால் சட்டை பட்டன்களைக் கழற்றிவிட்டு வெற்று மார்பைக் காட்டுகிறார். இதை இங்கிலாந்தாலும் ஆஸ்திரேலியாவாலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

இப்போது அணியில் விளையாடும் சுழல் பந்து வீச்சாளர்கள் பேடி, பிரசன்னா போல தரமான சுழல் வீச்சாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பந்தில் பேட்ஸ்மேன் பவுண்டரி அடித்தால் கையைத் தட்டுவதில்லை, மாறாக முறைத்துவிட்டோ வைது கொண்டோ போகிறார்கள்.

கங்குலிக்கு முன்னால் கபில்தேவ் முரட்டு வாலிபராக இருந்தார். 1992 டிசம்பரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த ஆட்டத்தில் பீட்டர் கிர்ஸ்டன் கிரீஸை விட்டு வெளியேறியதைப் பார்த்த கபில் தேவ், ஓடி வந்த நிலையிலேயே அவரை ரன் அவுட் செய்தார். உடனே எதிர் முனையில் இருந்த கெப்ளர் வெசல்ஸ் கபில்தேவை பேட்டாலேயே அடித்தார். அப்படி விராட் கோலியையோ, இஷாந்த் சர்மாவையோ, அஸ்வினையோ யாராவது அடிக்க முடியுமா? ஜடேஜாவைத் தொட முடியுமா?

இம்ரான் கொடுத்த பயிற்சி

1970-களில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த அதிகம் படிக்காத, பஞ்சாபி மட்டுமே பேசத் தெரிந்த கிரிக்கெட் வீரர் களை எப்படி உலகத்தர டெஸ்ட் அணியாக மாற்றி னார் என்று இம்ரான் கானே சொல்லியிருக்கிறார். “எதற்கும் பயப்படாதீர்கள், எதற்கும் மன்னிப்பு கேட்காதீர்கள், ஆங்கிலத்தில் கேட்டால் பஞ்சாபியில் பதில் சொல்லுங்கள் அவர்களுக்குப் புரியும்” என்று சொல்லி தயார்படுத்தியிருக்கிறார்.

கங்குலியின் வருகைக்குப் பிறகு, அந்தப் புரட்சிதான் இந்திய அணியிலும் நிகழ்ந்து வருகிறது. மும்பையில் பேட்டிங் பயிற்சி எடுத்த எல்லோருக்கும் சொல்வார்களாம், “வேகப் பந்தை அடித்து விளையாடும்போது பவுலரின் கண்களைப் பார்க்காதீர்கள் அவருக்குக் கோபம் அதிகமாகிவிடும்” என்று. இப்போதோ கோலி வேகப் பந்தை பவுண்டரிக்கு அடித்துவிட்டு, “போய் பொறுக்கிக்க” என்கிறார். இதையெல்லாம் தான் மாற்ற வேண்டும் என்கிறது புதிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

பின்குறிப்பு:

நம் காலத்து சிறந்த ஸ்பின்னர் யார்? 51 பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுத்த அஸ்வின் தான் 1945-க்குப் பிறகு வந்த ஸ்பின்னர்களிலேயே சாதனை படைத்திருக்கிறார். முத்தையா முரளிதரன் 55, ஷேன் வார்ன் 57 ஆகியோரை விட முன்னிலையில் இருக்கிறார். ஜடேஜா 62, கும்ப்ளே 66 அடுத்து வருகின்றனர். இவர்களுக்கும் முந்தைய பவுலர்களில் சந்திரசேகர் கும்ப்ளே இருவரும் 66, பிரசன்னா 76, பேடி 80, வெங்கட் 95 பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். ஹர்பஜன் சிங் 69. இதனால்தான் பழைய வீரர்கள் யாரும் புதிய திறன்படைத்த வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x