Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

கும்பலால் பெண் பலாத்கார சம்பவம்: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் 20 வயது பெண் ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பிர்பும் மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையை ஆராய்ந்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, “இந்த அறிக்கையில் காவல் துறை எடுத்த நடவடிக்கை இடம்பெறவில்லை.

இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்த சம்பவத்தை இந்த அமர்வு கடந்த ஜனவரி 24-ம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, சம்பவ இடத்துக்கு மாவட்ட நீதிபதி நேரில் சென்று விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பழங்குடியின மக்கள் வாழும் சுபல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இப்பெண், தங்கள் சமூகத்தைச் சேராத ஓர் இளைஞனை காதலித்துள்ளார்.

இதனை அறிந்த கிராம பஞ்சாயத்தார், அப்பெண்ணையும் அந்த இளைஞனையும் மரத்தில் கட்டிவைத்து உதைத்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இத்தொகையை செலுத்த வசதியில்லை என்று அப்பெண் கூறியதால், அவரை பலாத்காரம் செய்யுமாறு பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாயத்து தலைவரின் வீட்டிலேயே தனது தந்தையின் வயதை ஒத்த பலரால் தான் பாலத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பஞ்சாயத்து தலைவர் உள்பட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளதாக மேற்கு வங்க காவல்துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x