Published : 07 Feb 2017 12:06 PM
Last Updated : 07 Feb 2017 12:06 PM
கான்பூரில், இந்தூர் - பாட்னா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியான விபத்தில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை நேபாள விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இந்தூர் - பாட்னா ரயில் விபத்தில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் சாம்ஷுல் ஹோடா உட்பட 3 பேரை சிறப்புப் படை உதவியுடன் துபாயிலிருந்து நேபாளத்துக்கு அழைத்துவரவைத்து திருபுவனம் விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, டிஐஜி பசுபதி உபாத்யா கூறும்போது, "கான்பூரில் 2016-ல் இந்தூர் - பாட்னா ரயில் விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியான விபத்தில், முக்கிய குற்றவாளியான ஹோடா என்ற நபரை நாங்கள் தேடி வந்தோம். ஹோடா இந்தியாவில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்.
ஹோடா உட்பட மூவரும் துபாயிலிருந்து நேபாளத்துக்கு அழைத்துவரப்பட்டு நேபாள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஹோடாவை பிடிக்க எங்களுடன் இணைந்து நேபாள போலீஸரும் ஒத்துழைப்பு அளித்தனர்.
ஹோடாவுடன் பிரிஜ் கிஷோர் கிரி, ஆஷிஸ் சிங், உமேஷ் குமார் குர்மி ஆகிய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் நேபாளத்தின் காலையா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஹோடா நேபாளத்தில் பாரா மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்" எனக் கூறினார்.
மேலும் பாரா மாவட்டத்தில் ஹோடாவுக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT