Published : 20 Jan 2014 09:10 AM
Last Updated : 20 Jan 2014 09:10 AM

தெஹல்கா ஆசிரியர் மீது இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி உள்ள தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் (50) மீது, இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து, கோவா காவல் துறை குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தேஜ்பாலிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் மீதான தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

கடந்த ஆண்டு தருண் தேஜ்பாலுடன் கோவா சென்றி ருந்தபோது, நட்சத்திர ஓட்டலின் லிப்டில் அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெஹல்கா இதழின் முன்னாள் பெண் செய்தியாளர் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, தேஜ்பால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்கள் நிராகரித்ததை யடுத்து நவம்பர் 30-ம் தேதி அவரை கோவா போலீஸார் கைது செய்தனர்.

சதா துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேஜ்பாலின் ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி, தேஜ்பாலின் மகள் முன்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புலனாய்வு அதிகாரி வாக்குமூலத்தை ஏற்கெனவே பதிவு செய்துள்ளார். இதுதவிர, சம்பம் நடைபெற்றபோது பணியில் இருந்த ஓட்டல் ஊழியரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. - பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x