Last Updated : 17 Aug, 2016 04:57 PM

 

Published : 17 Aug 2016 04:57 PM
Last Updated : 17 Aug 2016 04:57 PM

காஷ்மீர் அல்லாது பயங்கரவாத பிரச்சினையில் பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் அழைப்புக்கு இந்தியா பதிலடி

ஜம்மு - காஷ்மீரின் எந்த ஒரு சூழ்நிலை பற்றியும் பேச பாகிஸ்தானுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று பாகிஸ்தான் பேச்சு வார்த்தை அழைப்பை நிராகரித்தது இந்தியா.

அதாவது, பயங்கரவாதம் குறித்துப் பேசுவோம், ஆனால் காஷ்மீர் குறித்து உங்களிடம் பேச எதுவுமில்லை என்று இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஐஜாஸ் அகமதுவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீர் பற்றி பேச பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் அயலுறவு செயலர், பிரதமர் நவாஸ் ஷெரிப் போன்றோர் தொடர்ந்து இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகக் கூறிவந்தனர்.

இந்நிலையில் ஜெய்சங்கர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் நிலைமைகளின் எந்த ஒரு தன்மை பற்றியும் பாகிஸ்தான் பேச உரிமையில்லை, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இஸ்லாமாபாத் வரத் தயாராக இருக்கிறேன், ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேசுவோம், காஷ்மீர் பற்றி பேச அல்ல.

ஏனெனில் ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்டு வரும் நிலைமைகளுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகம் பங்களிப்பு செய்வதால் அயலுறவுச் செயலர்கள் மட்டப் பேச்சு வார்த்தைகள் பயங்கரவாதத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலும் ஜம்மு காஷ்மீரின் நிலைமைகளுக்கு இந்தியா மீது தங்களுக்கு சாதகமான வகையில் பாகிஸ்தான் விமர்சனங்களை வைக்கும் போக்கையும் முற்றிலும் நிராகரிக்கிறோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தவித நியாயமும் இல்லை.

இவ்வாறு கூறியுள்ளார், இதனை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பம்பாவாலேயிடம் அளித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

இதற்கிடையே காஷ்மீர் குறித்து பிரதமர் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர பலுசிஸ்தான் பற்றி பேசி திசைதிருப்புதல் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x