

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் புதன்கிழமை மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.
மறைந்த ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முஃப்த் முகமது சயீத், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா, மறைந்த முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சுந்தர் லால் பாட்வா ஆகியோருக்கு பத்ம விருதுகள் கவுரவம் அளிக்கப்படுகின்றன.
எய்ட்ஸ் ஆராய்ச்சி மருத்துவர் சுனிதி சாலமன், இசைக் கலைஞர் இம்ரத் கான் ஆகிய பத்ம விருது பெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களில் இடம்பெற்றுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலாவுக்கு சமூக சேவைக்காக பத்ம விருது வழங்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களில் திரை விமர்சகர் பாவ்னா சோமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இசைக் கலைஞர் விஷ்வா மோகன் பட் பத்ம பூஷன் விருதையும், பாடகர் அனுராதா பட்வால் பத்மஸ்ரீ விருதையும் பெறுகின்றனர்.
நாட்டின் மிக உயரிய கவுரமான பாரத ரத்னா விருது இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்று அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.