Published : 04 Oct 2014 02:53 PM
Last Updated : 04 Oct 2014 02:53 PM

தெலங்கானாவில் தாய், மகள் பாலியல் பலாத்காரம்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

தெலங்கானாவின் மேடக் நகரிலுள்ள ராமக்காபேட் என்னும் கிராமத்தில் மர்ம கும்பல் ஒன்று, இளம் பெண் ஒருவரையும் அவரது தாயையும் பாலியல் பலாத்காரம் செய்தது அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடக் நகரின் ராமக்காபேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தசரா பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவிப்பதற்காக தனது தோழிகளை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரை போலீஸார் உடையில் இருந்த 4 பேர் தடுத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச் சென்று அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், வெளியே சென்ற மகள் வெகு நேரமாகியும் திரும்பாததால், அவரை அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாயும் தேடுதலில் ஈடுப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவரின் தாய் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேரிடம் தனது மகளை காணவில்லை, வழியில் இளம் பெண் யாரையாவது பார்த்தீர்களா என விசாரித்துள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள், கிராம எல்லையில் இளம் பெண் ஒருவரைக் கண்டதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். ஆனால், கிராம எல்லைக்குப் போகாமல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரே இரவில், தாய், மகள் என இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் டுபாக்கிலுள்ள அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாத்காரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குள்ளானவர்களை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x