Published : 01 Jul 2016 12:27 PM
Last Updated : 01 Jul 2016 12:27 PM

டெல்லியில் கேரள சிறுவன் அடித்துக் கொலை: 2 சிறுவர்கள் கைது

தலைநகர் டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது நிரம்பிய சிறுவனை 18 வயதுக்கும் குறைவான வயது கொண்ட சிறுவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களை கைது செய்துவிட்டதாகவும் அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் மேலும் கூறியதாவது:

பாலக்காட்டில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்து வசந்த் விஹார் பகுதியில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரஜத் கிருஷ்ணன் மேனன். ரஜத் வீட்டருகே இருக்கும் ஒரு கடையைச் சேர்ந்தவர்கள் இருவரும் தங்கள் கடையில் சில பொருட்களை ரஜத்தும் அவரது நண்பர்களும் திருடிச் சென்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜத் அதை மறுத்துள்ளார்.

ஆனால் அந்த இருவரும் ரஜத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரஜத் படுகாயமடைந்தார். காயங்களுடன் சரிந்த அவரை அந்த இருவருமே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், ரஜத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பின்னர் டெல்லி மெட்ரோ மருத்துவமனைக்கு ரஜத்தை கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அனுமதி மறுத்ததையடுத்து லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ரஜத்தை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர். சந்தேகம் ஏற்படவே போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் ரஜத்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்த இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x