Published : 02 Dec 2016 04:02 PM
Last Updated : 02 Dec 2016 04:02 PM
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இன்றும் கையிலெடுத்ததால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை 12-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை அவை கூடியதும் எதிர்க்கட்சியினர், ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் தேவை என்று கோரிக்கை விடுத்தனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தான் அவையை ஒத்திவைக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகக் கூறினார்.
அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநில அரசுகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் ராணுவத்தினர் தென்படுவது குறித்து இரு அவைகளிலும் கேள்வி எழுப்பினர்.
திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு
மீண்டும் அவை கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்தது. ஒத்திவைப்பு குறித்த அனைத்து அறிவிப்புகளும் ஏற்கப்படவில்லை. கூச்சல்களும், கோஷங்களும் அதிகரித்தன.
சில உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில்கள் அளிக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
தொடரும் அவை ஒத்திவைப்பு
வாக்கெடுப்புக்கு வகைசெய்யும் விதிகளின் கீழ்தான் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை அரசு ஏற்க முன்வராமல், விவாதத்தை மட்டும் நடத்தலாம் என்று கூறிவருகிறது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் தினந்தோறும் மக்களவையில் கூச்சல், குழப்பம் நீடித்து வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT