Published : 04 Jan 2017 11:43 AM
Last Updated : 04 Jan 2017 11:43 AM
சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இந்த சலுகையை அறிவித்துள்ளன.
மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இ-வாலட் முறையைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயுவுக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும்.
வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதன்மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை திரையில் தெரியும். அந்த 5 ரூபாயைக் கழித்த பின்னர் மீதத்தொகையைச் செலுத்த வேண்டும்.
தள்ளுபடி செய்யப்பட்ட தொகை வீட்டில் சிலிண்டர் விநியோகிக்கப்படும்போது அளிக்கப்படும் ரசீதிலும் இருக்கும்''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT