Published : 27 Dec 2016 03:23 PM
Last Updated : 27 Dec 2016 03:23 PM

பணமதிப்பு நீக்கத்தால் பயங்கரவாதம் அழிப்பு: மோடி பெருமிதம்

உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் பரிவர்த்தன் மகா கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பயங்கரவாதம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அவர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

"உத்தராகண்ட் கடவுளர்களின் மண். மேலும் ஆயுதப்படையில் உத்தராகண்டின் பங்களிப்பின் மூலம் தீரத்திற்கு பெயர் பெற்ற மண் உத்தராகண்ட்.

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் இனியும் வளர்ச்சிக்காக காத்திருக்க முடியாது என்று கூறுவதற்கான அடையாளமாக தெரிகிறது.

அனைத்து தட்பவெப்ப சாலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2013-ம் ஆண்டு உத்தராகண்ட் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோருக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

அனைத்து தட்பவெப்ப சாலைத் திட்டம், கங்கை நதியில் புனித நீராடுவோருக்கும், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி யாத்திரிகர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாகும்.

இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.12,000 கோடி திட்டத்தினால் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும்.

இம்மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கியப் பங்களிப்பு செய்வது சுற்றுலா.

அதிநெரிசல் நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி உத்தராகண்ட் மக்கள் செல்லக்கூடாது என்பதை மனதில் கொண்டு பலதிட்டங்கள் தீட்டி வருகிறோம்.

நமது கிராமப்புற மின்மயமாக்கம் பணக்காரர்களுக்கானதல்ல, ஏழைகளுக்கானது.

நான் உத்தராகண்டில் பல ஆண்டுகள் ஊழியனாக (ஆர்.எஸ்.எஸ்) பணியாற்றியுள்ளேன், மலைப்பகுதியில் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். உத்தராகண்ட் குடும்பத் தலைவிகளுக்கு சமையல் எரிவாயு அளிக்க நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். இந்தத் திட்டம் பணக்காரர்களின் நன்மைக்கானதா?

ஒரேபதவி ஒரே ஓய்வுதியம்:

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக ரூ.10,000 கோடி தேவைப்படும் இடத்தில் முந்தைய ஆட்சி வெறும் ரூ.500 கோடி ஒதுக்கி மக்களை முட்டாளாக்கியுள்ளனர். நாங்கள் இதுவரை ரூ.6,600 கோடி ஒதுக்கியுள்ளோம். இதில் ஆயிரக்கணக்கான உத்தராகண்ட் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர்.

பணமதிப்பு நீக்கம்:

ரிப்பன் வெட்டியும், விளக்குகள் ஏற்றியும் திறப்பு விழாக்கள் நடத்தவா நீங்கள் என்னை பிரதமராக்கியுள்ளீர்கள்? நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பு காவலன் பொறுப்பாகும். ஆனால் நான் எனது காவலன் பணியை ஆற்றுவதற்காக என் மீது விமர்சனம் தொடுக்கப்படுகிறது. கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடங்கி விட்டது.

ஏழைகளிடமிருந்து பணக்காரர்கள் கொள்ளை அடித்த பணத்தை நாட்டு மக்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். ஆனால் ஊழல் செய்வோரின் பழக்க வழக்கம் எளிதில் அவர்களை விட்டுச் சென்று விடாது. பழைய நோட்டுகளை அவர்கள் மாற்றுவதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இப்போது அகப்பட்டு விட்டனர். இந்நாட்டு மக்கள் எனக்கு ஆதரவு அளித்து என்னைக் காக்கின்றனர் இல்லையெனில் ஊழல்வாதிகள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்.

நாட்டு மக்கள் இதனால் அடையும் இன்னல்களை அறிவேன். ஆனால் இதிலும் எனக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவிற்காக நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

தீவிரவாதம், குற்ற நிழலுலகம், போதைப்பொருள் கும்பல் ஆகியவை பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் அழிந்து போயுள்ளன.

நேர்மையான மக்கள் அதிகாரமிக்கவர்களாக வேண்டும் என்பதற்காகவே போராடுகிறேன். இது ஒரு நீண்ட போர், இதற்கு மக்கள் ஆதரவு தேவை.

அடல் பிஹாரி வாஜ்பாய் உத்தராகண்டை உருவாக்கினார், அதனை மேலும் சிறப்பாக்குவது எங்கள் பொறுப்பாகும்."

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x