Published : 28 Jun 2019 12:36 PM
Last Updated : 28 Jun 2019 12:36 PM
மும்பையில் இரண்டு வாரங்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. நகர் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஆண்டுதோறும் ஜூன் 10-ம் தேதிக்கு முன்பாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளா உட்பட பிற மாநிலங்களிலும் பருவமழை தாமதமாகவே தொடங்கியது.
இதனால், இரண்டு வாரங்கள் தாமதமாக மும்பையில் பருவமழை தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காலை நேரத்தில் மழை கொட்டித் தீர்த்ததால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 4 நாட்களில் மும்பையில் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT