Published : 04 Sep 2018 11:40 AM
Last Updated : 04 Sep 2018 11:40 AM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ரஞ்சன் கோகோயின் பெயரை மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார் தீபக் மிஸ்ரா.
மத்திய அரசு அவரின் பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்பார்.
ரஞ்சன் கோகோய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1954-ம் ஆண்டு பிறந்த இவர், 1978-ல் பார் கவுன்சிலில் இணைந்தார். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT