Published : 28 Sep 2018 01:07 PM
Last Updated : 28 Sep 2018 01:07 PM
கோஷமிடக்கூடாது என்று கூறிய பேராசிரியரைத் தேசத் துரோகி என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஏபிவிபி மாணவர்கள் கூறியதால், விரக்தியடைந்த ஆசிரியர், மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மண்ட்சூரில் உள்ள ராஜீவ் காந்தி முதுகலை அரசுக் கல்லூரியின் பேராசிரியர் தினேஷ் குப்தா புதன்கிழமை அன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஏபிவிபி மாணவர்கள் சிலர் பிஎஸ்சி நான்காம் பருவத் தேர்வு முடிவுகளின் தாமதம் குறித்துப் பேச முதல்வர் அறையை நோக்கிக் கோஷமிட்டுக் கொண்டே சென்றனர்.
கோஷமிடுவது பாடம் நடத்துவதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை நிறுத்தச் சொன்னார் குப்தா. 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' உள்ளிட்ட தங்களது கோஷங்களை நிறுத்தச் சொல்லும் குப்தா ஒரு 'தேச துரோகி' என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதைக் கண்டி விரக்தி அடைந்த குப்தா, ஏபிவிபி மாணவர்களின் காலில் விழுந்தார். இதை எதிர்பாராத மாணவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து காலில் விழுந்தபடியே இருந்தார்.
#WATCH: A professor of Rajiv Gandhi PG College in Mandsaur tried to touch the feet of students belonging to ABVP, allegedly after they called him anti-national & asked him to apologise for asking them to stop raising slogans outside the classroom. #MadhyaPradesh (26.09.2018) pic.twitter.com/RivV1lzzrY
— ANI (@ANI) September 28, 2018
இதைத்தொடர்ந்து மறுநாள் (வியாழக்கிழமை) குப்தா 3 நாள் விடுப்பில் சென்றுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
குப்தா பேசும் மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில், ''ஏபிவிபி போராளிகளை விட எனக்கு அதிக நாட்டுப்பற்று இருக்கிறது. தேசபக்தி மிகுந்த கோஷங்களை ஒருமுறை அல்ல, ஆயிரம் முறை முழக்கமிடுவேன். ஆனால் அவர்களைப் போல அல்ல'' என்கிறார் குப்தா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT