Published : 01 Sep 2018 10:41 AM
Last Updated : 01 Sep 2018 10:41 AM

சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி: வைரலான புகைப்படம்; மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம்

 

என்.டி.ராமாராவின் மகனும், தெலுங்கு தேசக் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடலுடன் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்ஃபி எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா (61), தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத் தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.

தனது 4 வயது முதல் நடிக்கத் தொடங்கிய ஹரிகிருஷ்ணா, சினிமா, அரசியல் ஆகிய இரு துறைகளிலும் சாதித்தார். தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் செயற் குழு உறுப்பினராக இருந்து வந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் உடல், ஹைதராபாத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தபோது நல்கொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். அப்போது அவரது உடலுடன் அந்த மருத்துவமனை செவிலியர் உட்பட ஊழியர்கள் 4 பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.

இதனை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். ஹரிகிருஷ்ணா உடலுடன் மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட 4 ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x