Published : 15 Sep 2018 11:26 AM
Last Updated : 15 Sep 2018 11:26 AM

தெலங்கானாவில் அதிரவைக்கும் ஆணவக்கொலை: கர்ப்பமான மனைவியின் கண் முன்னே கணவரை வெட்டிச் சாய்த்த கூலிப்படை

தெலுங்கானா மாநிலத்தில் சாதிய ஆணவத்தால் மகளின் கணவரை, கூலிப்படையை ஏவி, கொடூரமாக தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்தபோதே நண்பர்கள். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவிவன் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மாருதி ராவ் பிரனயை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அம்ருதா கர்ப்பமானதால், மாருதி ராவ் மிகுந்த கோபமடைந்துள்ளார். அம்ருதா, மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் பிரனய் குமாருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து இருவரும் வெளியே வந்த கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இருவரையும் மறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை அரிவாளால் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தன் கண் முன்னே கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த அம்ருதா கதறி அழுதார்.

பிரனய் வெட்டி கொலை செய்யப்பட்டபோது, அந்த காட்சிகள் மருத்வமனைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அம்ருதாவின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத அவரது தந்தை மாருதி ராவ், கூலிப்படையை ஏறி பிரனய் குமாரை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மாருதி ராவ் தற்போது தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x