Published : 28 Sep 2018 10:49 AM
Last Updated : 28 Sep 2018 10:49 AM
எம்.எஸ்சி நர்ஸிங் இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 2016ல் தொகுக்கப்பட்ட அத்தனை கேள்விகளையும் அப்படியே நகலெடுத்து வழங்கப்பட்டுள்ளதை மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
பெங்களூருவில் இயங்கிவரும் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மேற்படிப்புக்கான இரண்டாமாண்டு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் நர்ஸிங் படிப்புக்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
தேர்வு எழுத வழங்கப்பட்ட கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த அனைத்துக் கேள்விகளும் அப்படியே 2016-ல் கேட்கப்பட்ட கேள்விகள் என்பதை தேர்வு எழுதிய மாணவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தேர்வு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்
மேலும், குறிப்பிட்ட, நர்ஸிங் மேனேஜ்மென்ட் படிப்புக்கான பழைய தேர்வுத்தாள் அப்படியே வந்துள்ளதால் சில மாணவர்களுக்கு அது ''நியாயமற்ற'' சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. எனவே இத்தேர்வு மீண்டும் நடத்தவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் பல்கலைக்கழக அதிகாரிகள் இதை மறுத்தனர். துணை முதல்வர் எஸ். சச்சீந்தன் மற்றும் பதிவாளர் (மதிப்பீடு) எம்.கே. ரமேஷ் ஆகியோர் இதைப்பற்றி தெரிவிக்கையில், ''வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாளை அனைத்து மாணவர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அப்படியிருக்க மீண்டும் தேர்வு என்பது தேவையில்லாதது. மேலும் இப்பிரச்சினை பல்கலைக்கழகத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒரு பழைய கேள்வித்தாளிலிருந்து கேள்விகள் மறுபடியும் உருவாக்கப்படக் கூடாது என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ''பாடத்திட்டத்திற்கு வெளியேயிருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதுதான் முக்கியம். சில நேரங்களில் இப்படி நடப்பதுண்டு'' என்றார்.
பேராசிரியர் சச்சிதானந்த் பேசுகையில், ''இதே கேள்வித்தாளுக்கு அனைத்து மாணவர்களும்தானே பதில் எழுதிஉள்ளனர். வேறென்ன பிரச்சினை'' என்று கேட்டார்.
என்றாலும் மாணவர்களில் சிலர், ஒரு தேர்வில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கேள்விகள் அப்படியே அச்சு அசலாக இன்னொரு தேர்வில் பயன்படுத்தப்பட்டுள்ளதன் நோக்கம் குறித்து சந்தேகங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT