Published : 12 Sep 2018 08:14 AM
Last Updated : 12 Sep 2018 08:14 AM
கர்நாடகாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவில் இணையப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் அம்மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி ஆட்சி அமைத்தார். குமாரசாமி பதவியேற்றது முதலாக, அமைச்சரவை பங்கீடு, துறை பங்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் - மஜத கட்சியினரையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனிடையே, அதிருப்தியில் இருக்கும் இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எம்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சரவை யில் இடம் அளிக்காததால் பெல்காம் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான சதீஷ் ஜார்கிஹோளி அதிருப்தி அடைந்தார். மேலும், குமாரசாமி அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடமும் அவர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, சதீஷ் ஜார்கி ஹோளியின் சகோதரர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு நகராட்சித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எனினும் இதில் திருப்தி அடையாத சதீஷ் ஜார்கிஹோளி, சர்க்கரைத் துறை அல்லது பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் கர்நாடக அரசை பகிரங்கமாக விமர்சித்து வந்தார்.
இந்த சூழலில், ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு எதிரானவராக கருதப்பபடும் லக்ஷ்மி ஹெம்பல் கருக்கும், அவரது ஆதரவாளர் களுக்கும் பெல்காம் மாவட்ட காங்கிரஸில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த வாரம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெல்காமில் வெற்றி பெற்ற லக்ஷ்மி ஹெம்பல்கரின் ஆதரவாளர்களுக்கு மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளும் அளிக்கப்பட்டது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த சதீஷ் ஜார்கிஹோளி, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், சதீஷ் ஜார்கிஹோளி தலைமையில் அவரது சகோதரரும் அமைச் சருமான ரமேஷ் ஜார்கிஹோளி, பெல்காம் மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ உள்பட 12 எம்எல்ஏ.க் களுடன் விரைவில் பாஜகவில் சேரப் போவதாக தகவல் வெளி யாகியுள்ளது. இது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில், “எங்களுக்கு காங்கிரஸ் கட்சியி லும், இந்த ஆட்சியிலும் உரிய மரியாதை இல்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எதையும் வெளிப் படையாக கூற முடியாது. கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவும், முன்னாள் அமைச்சர் ராமலுவும் நட்பின் அடிப்படையிலே எங்க ளுடன் பேசினர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை ஜார்கிஹோளி சகோதரர்களை துணை முதல்வர் பரமேஷ்வர் நேரில் சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது, பெல்காம் மாவட்ட காங்கிரஸில் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பரமேஸ்வர் கூறியதாவது:
கர்நாடகாவில் கூட்டணி அரசு அதன் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். பாஜகவினர் எங்கள் கூட்டணியை உடைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் களது கனவு ஒருநாளும் பலிக்காது. ஜார்கிஹோளி சகோதரர்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதில்லை என உறுதியாக கூறியுள்ளனர். எனவே காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜகவில் சேருகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்தார்.
எடியூரப்பா அவசர ஆலோசனை
பெங்களூருவில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் பாஜக அமைச்சர்கள் அசோக், சுரேஷ், ஈஸ்வரப்பா, ஹோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் வட கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் கோவிந்த் கார்ஜோள், உமேஷ் கத்தி, ராஜீவ், அரவிந்த் பல்லாட் ஆகியோரும் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT