Published : 18 Sep 2018 03:05 PM
Last Updated : 18 Sep 2018 03:05 PM
டெல்லி தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷை தாக்கியதாகக் கூறி தொடர்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேரும் வரும் அக்டோபர் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் உத்தரவிட்டார்.
டெல்லியின் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டில் ஆலோசனையில் இருந்தார். அப்போது, ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தன்னைத் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அமனதுல்லா கான்,பிரகாஷ் ஜர்வால்ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமனதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால், நிதின் தியாகி, ரிதுராஜ் கோவிந்த், சஞ்சீவ் ஜா, அஜய் தத், ராஜேஷ் ரிஷி, ராஜேஷ் குப்தா, மதன் லால், பிரவீண் குமார், தினேஷ் மோங்கியா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலிடம் கடந்த மே மாதம் 18-ம் தேதி 3 மணிநேரம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.
1,300 பக்க குற்றப்பத்திரிகையில், கேஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் தலைமைச் செயலாளரை மிரட்டியுள்ளனர், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 11 பேருக்கு அக்டோபர் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன் அனுப்பி நீதிபதி, பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் உத்தரவிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT