Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM

ஆந்திராவில் ரூ.8 கோடி மதிப்பில் சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டிடம் தகர்ப்பு: தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம்

ஆந்திர மாநிலம் அமராவதியில் தெலுங்கு தேசம் ஆட்சியில் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ கட்டிடம் நேற்று தகர்க்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு, அமராவதி பகுதியில் உண்டவல்லி எனும் இடத்தில் ‘பிரஜா வேதிகா’ என்கிற மக்கள் தர்பார் கட்டிடத்தை நிறுவியது.

இதில், முக்கிய ஆலோசனை கூட்டங்கள், மக்கள் குறைகளை தீர்க்க முதல்வரின் மனு நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. இந்தக் கட்டிடம், கிருஷ்ணா படுகை மீது சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியது இதுபோன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார்.

இதனிடையே, பிரஜா வேதிகா கட்டிடத்தில் கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்தது. அப்போது, இந்த கட்டிடத்தை இடிக்குமாறு ஜெகன்மோகன் உத்தரவிட்டார்.

அதன்படி, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இக்கட்டிடம் நேற்று முழுமையாக இடிக்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் உமாமகேஸ்வர ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:அரசு கட்டிடத்தை இடித்து ஏதோ சாதித்து விட்டதை போல் ஜெகன்மோகன் நினைக்கிறார்.

இது, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இதேபோன்று, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஹைதராபாத் சாலை எண் 2-ல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வந்தார். எனினும், இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவரது மகன் ஜெகன், அரசு கட்டிடத்தை இடித்து தன்னுடைய சுயரூபத்தை வெளி உலகுக்கு காட்டி இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x