Published : 27 Jun 2019 09:20 PM
Last Updated : 27 Jun 2019 09:20 PM

‘இணைந்து செயல்படலாம்’- மம்தா பானர்ஜி அழைப்பு அர்த்தமற்றது: இந்திய கம்யூனிஸ்ட் பதில்

மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மீது இன்னமும் வன்முறைகள் தொடரும் நிலையில் இணைந்து செயல்படலாம் என மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது அர்த்தமற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன.  இந்தநிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை அனுப்பியுள்ளது. ஆனால், நான் கேட்கிறேன், எங்களிடம் சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசும் மத்திய அரசு, ஏன் உத்தரப் பிரதேசத்தில் பேசுவதில்லை. ஹரியாணாவில் பேசுவதில்லை. அந்த மாநிலங்களுக்கு ஏதேனும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனைகள் அனுப்பினார்களா? அதற்கான பதில் இல்லையே. அரசியல்ரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு இதுபோன்ற நோட்டீஸ் அனுப்புகிறது.

மத்தியில் பாஜகவை எதிர்ப்பதற்கு எங்களுடன் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். வாக்குகள் பாஜகவுக்குச் சென்றால், மாநிலத்தில் வன்முறைதான் நடக்கும் என்பதுதான் சாட்சி.

இவ்வாறு பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி இதுகுறித்து கூறுகையில் ‘‘இடதுசாரி கட்சிகளை வெறும் அரசியல் எதிராளிகளாக பார்க்காமல் எதிரிகளாகவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  கருதுகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்களை திரிணாமூல் கட்சியினர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் இன்னமும் தொடர்கிறது. இந்த சூழலில் இணைந்து செயல்படுவது அர்த்தமற்றது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x