Published : 25 Jun 2019 02:28 PM
Last Updated : 25 Jun 2019 02:28 PM
தமிழகத்துக்கான ஜூன், ஜூலை மாத நீரைத் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழகம்,கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களையும் உறுப்பினர்களாக கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ஆணையம் கூடி விவாதித்தது.
கடந்த மாதம் 28-ம் தேதி மூன்றாம் முறையாக கூடியபோது, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில அரசு, கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என தெரிவித்தது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழகத்துக்கான ஜூன், ஜூலை மாத நீரைத் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மாதத்துக்கான 31.24 டி.எம்.சி மற்றும் ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 40.43 டி.எம்.சி நீரைத் திறந்து விடவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மழையளவு மற்றும் தண்ணீர் வரத்து ஆகியவற்றை வைத்து இதைச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கர்நாடகா தரப்பில் கூறும்போது, ''மழை பெய்து, அணை வரத்தில் நீர் அதிகமாக இருந்தால் நிச்சயமாகத் தண்ணீர் திறக்கப்படும். இந்த உத்தரவை ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில் நீர் வரத்தைப் பொறுத்து இந்த உத்தரவு நடைமுறைத்தப்படும். எங்களால் முடிந்த அளவு நீரைத் திறக்க முயற்சி செய்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய காவிரி ஆணையத் தலைவர் மசூத் உசேன், ''கர்நாடக அணைகளுக்கு குறைந்த நீரே வந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்துக்கு ஜூன் 24 வரை 1.77 டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை குறித்துத் தனியாக விவாதிக்கப்படும் என்ற முடிவுக்கு இரு மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. காவிரி நீர் தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் நல்ல முறையில் தீர்வு எட்டப்படும்'' என்றார் உசேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT