Last Updated : 01 Jun, 2019 10:47 AM

 

Published : 01 Jun 2019 10:47 AM
Last Updated : 01 Jun 2019 10:47 AM

வயநாடு விவசாயி தற்கொலை விவகாரம்: ராகுல் கடிதத்துக்கு பினராயி பதில்

கேரள மாநில வயநாட்டில் விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்துக்கு பதிலளித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முன்னதாக ராகுல் காந்தி முதல்வர் பினராயிக்கு எழுதியிருந்த கடிதத்தில், வயநாட்டைச் சேர்ந்த விவசாயி விடி தினேஷ் குமாரின் தற்கொலை குறித்து கேரள அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

"வி.டி.தினேஷ் குமார் என்ற விவசாயியின் தற்கொலை செய்தி என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. நீரவரம் என்ற பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரின் மனைவி சுஜிதாவிடம் ஆறுதல் சொல்ல பேசியபோதுதான், குமார் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் எனக்குத் தெரியவந்தது.

குமாரின் கதை போல் நிறைய விவசாயிகள் வயநாட்டில் இத்தகைய முடிவை எடுத்திருக்கின்றனர். கேரள அரசாங்கம் விவசாயிகள் தங்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த 31 டிசம்பர் 2019 வரை சலுகை அளித்தும் கூட வங்கிகள் நெருக்கடி அளிக்கின்றன.

எனவே இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு வேண்டுகிறேன்.

2018 வெள்ளம் விவசாயத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்ந்து நீண்ட கால முடிவுகளை எடுப்பது நலம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள பினராயி, "இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கையை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். அதற்கேற்ப அந்தக் குடும்பத்துக்கு நிதி உதவி செய்யப்படும்" என பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் அந்தக் கடிதத்தில், கேரள அரசு விவசாயிகளுக்கு உதவ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் நிலையைக் கருதி வங்கிக் கடனை காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான சட்ட வழிவகையையும் செய்துள்ளது.

நாடு முழுவதுமே நிலவும் விவசாயிகளின் துயர் குறித்து நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது. இந்த இயக்கத்தில் ராகுலும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கான கடன்கள் SARFAESI சட்டத்தின் கீழ் வருவதால் அதன் மீதான அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வரும் ஜூன் 7 தொடங்கி 2 நாட்கள் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x