Published : 04 Jun 2019 12:00 AM
Last Updated : 04 Jun 2019 12:00 AM

ஆந்திராவில் சிபிஐ மீதான தடையை நீக்க முடிவு: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை

ஆந்திராவில் சிபிஐ மீதான தடையை நீக்க புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

மாநிலங்களில் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பொது ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த பொது ஒப்புதலை முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு வாபஸ் பெற்றது. இதன்காரணமாக ஆந்திராவில் சிபிஐ அதிகாரிகள் சோதனை, விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சிபிஐ மீதான தடையை விலக்கிக் கொள்ள புதிய அரசு முடிவு செய்துள்ளது.

விரைவில் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜய்சாய் ரெட்டி டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுகிறது என்று கூறிய அவர் கடந்த ஆண்டு நவம்பரில் அந்த அமைப்பை ஆந்திராவில் தடை செய்தார். இதனை மறுபரிசீலனை செய்த தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தடையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இவ்வாறு விஜய்சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x