Last Updated : 03 Jun, 2019 05:03 PM

 

Published : 03 Jun 2019 05:03 PM
Last Updated : 03 Jun 2019 05:03 PM

11 வயதுக் குழந்தையின் உருக்கமான கடிதம்: பிரதமர் மோடியிடம் உதவி கேட்கும் போலந்துப் பெண்

இந்தியா திரும்புவதற்கு பிரதமர் மோடியிடம் உதவி கோரிய போலந்துப் பெண் ஒருவர், தனது 11 வயது மகள் உருக்கமாக எழுதிய ஒரு கடிதத்தை ட்வீட் செய்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரிடம் கோவா திரும்ப உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த மார்த்தா கோட்லார்ஸ்கா தன் மகளுடன் கோவாவில் வசித்து வந்தார். அவரது 11 வயது மகள் அலிக்ஜா வானட்கா அங்கேயே படித்து வந்தார்.

இரு மாதங்களுக்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற மார்த்தா கடந்த மார்ச் 24 அன்று இந்தியா திரும்ப முயன்றார்.

ஆனால் பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விசா காலாவதியானதாகக் கூறி மார்த்தா தடுத்து நிறுத்தப்பட்டார்.  அவசர அவசரமாக பெங்களூரில் அவர் தனது இந்திய விசாவை புதுப்பிப்பதற்காக முயன்றபோது அவர், கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவாவிலிருந்து தனது மகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் மார்த்தா தாய்லாந்தில் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது இருவரும் கம்போடியாவில் உள்ளனர்.

இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட சூழல் அவர்களுக்குள் பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மார்த்தா, பிரதமருக்கு ட்வீட்டில் தனது நிலையைச் சொல்லி உதவி கேட்க முயன்றார்.

மார்த்தா பிரதமர் மோடிக்கு எழுதிய ட்வீட்களின் விவரம்:

''தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் @narendramodi. என் மகள் மிகவும் வருத்தமாக இருக்கிறாள். அவளுக்கு 11 வயதுதான் ஆகிறது. இந்தியா எங்கள் வீட்டைப் போன்றது என்று நாங்கள் அழைப்போம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரிடமும் மார்த்தா ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தானும் தனது மகளும் கோவா திரும்புவதற்கு தயவுசெய்து ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்..

கோவாவை நேசிப்பதை வெளிப்படுத்தும்வகையிலான, தனது மகள் அலிக்ஜா வானட்கா கைப்பட எழுதியுள்ள கடிதத்தையும் ட்வீட்டில் இணைத்துள்ளார்.

அலிக்ஜா வானட்கா மோடிக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் விவரம்:

''கோவாவில் உள்ள எனது இயற்கை எழில் மிக்க பள்ளியை நான் மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் பசுக்களை கவனித்துக்கொள்ள உதவும் எனது தன்னார்வப் பொறுப்புகளை தற்போது நான் இழந்துள்ளேன்.

கடந்த மார்ச் 24, 2019 அன்று என் அம்மாவால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு குறுகிய பயணத்தில் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டோம்.

தடை செய்யப்பட்ட பட்டியலில் எங்கள் பெயர் இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்குக் காரணம் நாங்கள் விசா முடிந்த பிறகு அதிகநாட்கள் அனுமதியின்றி தங்கிவிட்டதாகக் கூறினார்கள்.

நான் இப்போது என் அம்மாவுடன் இருக்கிறேன். ஆனால், எனக்குப் பிடித்த நாட்டில் இனி என் பழைய வாழ்க்கையை இழந்துவிடும் நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நான் அனுபவித்த எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு இப்போது தனியாக உணர்கிறேன். நான் இல்லாமல் என் பிராணிகள் என்னைக் குழப்பமடையக் கூடும் என்று எனக்குத் தெரியும். நான் கோபமோ அல்லது வருத்தமோ இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை''.

இவ்வாறு அலிக்ஜா வானட்கா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x