Published : 14 Jun 2019 01:22 PM
Last Updated : 14 Jun 2019 01:22 PM
உத்தர பிரதேசத்தில் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் தம்பி ஷிவ்பால் சிங் இடையே சமரசம் செய்யும் முலாயம் சிங்கின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியுடன் இணையும் திட்டம் இல்லை என ஷிவ்பால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜகவை வீழ்த்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தார் அகிலேஷ். ஆனால், இந்தக் கூட்டணியில் மாயாவதிக்கு 10 தொகுதிகளும், அகிலேஷுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதே சமயத்தில், பாஜகவுக்கு 64 தொகுதிகளும், அதன் கூட்டணியான அப்னா தளம் கட்சிக்கு 2 தொகுதிகளும் கிடைத்தன. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கிடைத்தது.
சமாஜ்வாதி கட்சியின் தோல்விக்கு முலாயம்சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் சிங் முக்கிய காரணமாக இருந்தார். அகிலேஷுடன் ஏற்பட்ட மோதலால் வெளியேறி பிரகதீஷல் சமாஜ்வாதி (லோகியா) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி இத்தேர்தலில் ஷிவ்பால் போட்டியிட்டார்.
சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளை பிரித்து அக்கட்சி தோல்வியடைய இவரும் காரணமாக அமைந்தார். இதையடுத்து ஷிவ்பாலிடம் பேசி அவரை மீண்டும் கட்சியில் இணைக்க முலாயம் சிங் யாதவ் முயன்று வருகிறார். இதை ஏற்று அகிலேஷும் ஒத்துழைத்தார்.
எனினும் ஷிவ்பால் சிங் கட்சியை கலைத்து விட்டு சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் இணைய மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சமாஜ்வாதி கட்சியுடன் எனது கட்சியை இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை. எங்கள் கட்சியை வலுப்படுத்தவே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் கூட்டணி அமைப்பது என்றால் அதுபற்றி பரிசீலிக்க தயார்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT