Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கில் விசாரணை அதிகாரி முன் 72 மணி நேரத்துக்குள் ஆஜராகுமாறு கேரள மார்க்சிஸ்ட் தலைவரின் மகன் பினோய் கொடியேரிக்கு மும்பை போலீஸார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய். தொழிலதிபரான இவர் மீது பிஹாரை சேர்ந்த 33-வயது பெண் ஒருவர் மும்பை அந்தேரியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், தான் துபாயில் ஒரு டான்ஸ் பாரில் பணியாற்றும்போது தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பினோய் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதன் மூலம் தனக்கு 8 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் பேரில் பினோய் மீது ஓஷிவாரா போலீஸார் பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக மும்பை போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் கண்ணூர் வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீஷ் குமாரை சந்தித்தனர். இந்நிலையில் நேற்று காலை உள்ளூர் போலீஸார் இருவருடன், கண்ணூர் மாவட்டம் திருவங்காடில் உள்ள பினோய் வீட்டுக்கு மும்பை போலீஸார் சென்றனர். அங்கு பினோய் இல்லை. இதையடுத்து அங்கிருந்த அவரது உறவினர்களிடம் நோட்டீஸ் அளித்தனர். அதில் வழக்கு தொடர்பாக அடுத்த 72 மணி நேரத்துக்குள் மும்பையில் உள்ள விசாரணை அதிகாரி முன் பினோய் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT