

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் (2014 - 2024) இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் ஜென்-ஸி தலைமுறையினரிடையே வேலையின்மை குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த 10 ஆண்டுகால அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமர்ப்பித்தார்.
அதில் அவர் கூறியதாவது: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(யுபிஏ) ஆட்சியின்போது (2004 - 2014) இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. அப்போது வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருந்தது.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய தரவுகளின்படி 2014 முதல் 2024 வரையிலான காலத்தில் நாட்டில் 17 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது யுபிஏ ஆட்சிக் காலத்தைவிட சுமார் 6 மடங்கு அதிகம். கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 1.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து, அமைப்புசார் துறையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (பிஎல்எப்எஸ்) தரவுகளின்படி, நாட்டின் வேலையின்மை விகிதம் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது உலகளாவிய சராசரியான 4.8 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.
ஜி20 அமைப்பில் உள்ள பல முக்கிய வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலைவாய்ப்பு குறியீடுகள் சிறப்பான இடத்தில் உள்ளன. நிதி ஆயோக் தரவுகளின்படி, 2014 முதல் 2023 வரையிலான காலத்தில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.