Published : 02 Mar 2018 12:03 PM
Last Updated : 02 Mar 2018 12:03 PM
செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தரப்பில் கூறுகையில், “ இன்று அதிகாலை வழக்கமான சேசாலம் வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது, ஒரு லாரி தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் ரேணிகுண்டாவில் இருந்து கடப்பா செல்லும் சாலையில் சென்றது. அதை ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிப் பகுதியில் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதற்குள் 80 பேர் இருந்தனர்.
இந்த லாரி தமிழகத்தின் ஆர்காடு பகுதியில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனைவரும் தமிழர்கள் எனவும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர். இந்த 80 பேரில் 3 பேர் பட்டதாரி இளைஞர்கள் என்றும் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் கைது செய்து திருப்பதி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் செம்மரம் வெட்டச் செல்வதாகக் கூறி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாம்த 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி ஒரு மனுத் தாக்கல் செய்து இருந்தார். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 500 பேர் செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி, ஆந்திர போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு வைத்துள்ளனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மிதந்தனர் என்பதும், அவர்கள் செம்மரம் வெட்டச் சென்றதால் அடித்து கொல்லப்பட்டார்களா என்பதும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT