Last Updated : 07 Mar, 2018 09:21 AM

 

Published : 07 Mar 2018 09:21 AM
Last Updated : 07 Mar 2018 09:21 AM

காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை இல்லை: தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாத்மா காந்தி சுடப்பட்ட வழக்கை மறுவிசாரணை நடத்த முடியாது. சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்போம் என்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பையைச் சேர்ந்த அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னீஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அவர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘நாதுராம் கோட்சே தவிர வேறொருவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நான்காவது குண்டு பாய்ந்ததில் தான் காந்தி கொல்லப்பட்டார் என்ற வாதத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே மற்றும் எல்.நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கல்வி ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு எப்போதோ முடிந்துவிட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முடியாது. மக்களுக்கு ஏற்கெனவே எல்லா உண்மைகளும் தெரியும். காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் நாங்கள் செய்யப் போவதில்லை. இந்த வழக்கில் உணர்வுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டாம். உங்கள் வாதங்களை கேட்டுள்ளோம். இதில் உணர்வுபூர்வமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. சட்டப்பூர்வமாக எந்த உத்தரவை பிறப்பிக்க முடியுமோ அதை பிறப்பிப்போம்” என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறியபோது, ‘கல்வி ஆய்வு நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வருவதை தடுக்கவில்லை. சட்டப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே நாங்கள் செய்ய முடியும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x