Published : 26 Mar 2018 09:42 AM
Last Updated : 26 Mar 2018 09:42 AM

பிரியா வாரியர் கண் அசைவில் விழிப்புணர்வு: சாலை பாதுகாப்பில் குஜராத் போலீஸார் புதிய முயற்சி

நடிகை பிரியா வாரியரின் கண் அசைவு வைரல் படம் மூலம் குஜராத்தின் வடோதரா போலீஸார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்தின் ‘மாணிக்கிய மலராய பூவி’ பாடலில் நடித்திருக்கும் நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்துள்ளார். அவரது கண் அசைவு வைரல் படம் மூலம் குஜராத்தின் வடோதரா நகர போலீஸார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நகர போலீஸ் துறையின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பிரியா வாரியரின் வைரல் படத்துடன் எச்சரிக்கை வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில், “கண் அசைவில் விபத்துகள் நேரிடலாம். கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியா வாரியரின் வைரல் புகைப்படம் காரணமாக வடோதரா போலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் இணையதளத்தில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் சசிதர் கூறியபோது, “வெறுமனே கருத்துகளை, அறிவுரைகளைக் கூறும்போது அவை மக்களை சென்றடைவது இல்லை. அதேநேரம் பாலிவுட் திரைப்படங்களின் பிரபலமான வாசகங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கிறது. சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்கு கிடைக்காத வரவேற்பு பிரியா வாரியர் படத்துடன்கூடிய பிரச்சாரத்துக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x