Last Updated : 27 Mar, 2018 08:20 PM

 

Published : 27 Mar 2018 08:20 PM
Last Updated : 27 Mar 2018 08:20 PM

மூன்றாவது கூட்டணி: பிரதமராகும் வாய்ப்பை தேடும் எதிர்கட்சி தலைவர்கள்

பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இந்தமுறை பல்வேறு மாநில, பிராந்திய கட்சி தலைவர்களும் இறங்கியுள்ளனர். தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அடுத்து பிரதமராகும் திட்டம் அதன் பின்னணியில் உள்ளது.

ஜனதா கூட்டணிக்கு பின், மக்களவை தேர்தலில் எதிர்கட்சி கூட்டணி என்பது தேசியக் கட்சி தலைவர்களால் உருவாகும் வழக்கம் இருந்தது. இந்தவகையில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் அமைந்தன. 2019-ல் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்க்க திரிணமூல் காங்கிரஸ் தலைவியான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மூன்றாவது கூட்டணிக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

முன்னணியில் சரத்பவார்

இவர்களில் குடியரசு தலைவர் பதவி பெறுவதில் தோல்வி அடைந்த சரத்பவார் முன்னணி வகிக்கிறார். இவரது முயற்சியில் மட்டும் காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவரைபோலவே முன்பு முயன்ற பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்து விட்டார். மற்றொருவரான முலாயம்சிங் தமது கட்சியில் ஏற்பட்ட பிளவால் பின்வாங்கி விட்டார்.

பிரதமர் வேட்பாளர் இல்லை

மூன்றாவது கூட்டணி பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடியாத நிலையில்தான் தேர்தலில் போட்டியிடும். எனினும், இதை முன்னிறுத்தும் தலைவர் மூன்றாவது கூட்டணியில் அதிக பலம் பெற்றவராக இருப்பார். இக்கூட்டணிக்கு தேர்தலில் ஒருவேளை வெற்றி கிடைத்தால் அந்த பலம் வாய்ந்த தலைவர் பிரதமராக முயற்சிக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. குறைந்தபட்சம் துணை பிரதமராக பேரம் பேசும் நிலையாவது ஏற்படும்.

ஏனெனில், இவர்கள் அனைவருமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவதை விரும்பவில்லை. இதற்கு இடதுசாரிகளும் ஆதரவளிக்க முன்வரலாம். இந்த சூழலில் உருவாகும் மோதலை வாய்ப்பாகப் பயன்படுத்த பலரும் திட்டமிட்டுள்ளதாக தேசிய அரசியலில் பேசப்படுகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் பிரதமரானவர்கள் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள்.

மாயாவதி-அகிலேஷ் ரகசிய உடன்பாடு

இந்நிலையில், கூட்டணியை உருவாக்கும் முயற்சி எடுக்காமலே பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதியும் அடுத்த பிரதமராக முயல்கிறார். உபியில் மிக அதிகமாக 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், அதிக தொகுதிகள் பெற முயலும் மாயாவதி சமாஜ்வாதியுடன் கூட்டணியை உறுதியாக்கி வைத்துள்ளார். நேற்று லக்னோவில் பேசியவர் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார். இதன் பின்னணியில் அவரும் முதல் தலீத் பிரதமராக மாயாவதி விரும்புவது தெரிகிறது.

காங்கிரஸுக்கும் உபியில் முன்பிருந்த செல்வாக்கு குறைந்து வருகிறது. பிரியங்காவை அரசியலில் இறக்கினால் தவிர உபியில் முன்னேற முடியாத நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது. தம் கூட்டணியில் காங்கிரஸையும் சேர்த்தால் இருவருக்குமே வெற்றித்தொகுதிகள் குறையும். எனவே,

உபியில் சமாஜ்வாதி தலைமையில் அகிலேஷ்சிங் யாதவ் முதல்வராக மாயாவதி உதவுவார். இதற்கு மாறாக மத்தியில் மாயாவதியை பிரதமராக்க அகிலேஷ் உதவ வேண்டும். இவ்வாறு ஒரு ரகசிய உடன்படிக்கை இருவருக்குள் உருவாகி வருகிறது.

இடதுசாரிகள் ஆதரவு

வடகிழக்கு மாநிலங்களில் வலுவானக் கட்சியாக இருந்த இடதுசாரிகளுக்கு அங்கு ஆட்டம் காணத் துவங்கி உள்ளது. ஏற்கனவே, மேற்கு வங்க மாநிலத்தில் அவர்கள் பலத்தை மம்தா குறைத்திருக்கிறார். இப்பகுதியில் காங்கிரஸுக்கும் அடுத்த மக்களவையில் கிடைக்கும் தொகுதிகள் குறையும். இவற்றில் மொத்தம் உள்ள 25-ல் 21 தொகுதிகளை பாஜக தலைவர் அமித்ஷா இப்போதே குறி வைத்து விட்டார். இது நடந்தால், பிரதமர் பதவியை விரும்பாத இடதுசாரிகள் காங்கிரஸ் அல்லாத தலைவரை அப்பதவிக்காக ஆதரவளிக்க முன்வருவார்கள் என்பதும் ஒரு கணிப்பாக உள்ளது.

அதிமுகவின் நிலை

பாஜகவின் எதிர்கட்சிகள் வரிசையில் இருந்தும் அதிமுக அதை பெயரளவிற்கு என்பது போல் உள்ளது. இதனால், அதிமுக எதிர்கட்சிகளுடனும் சேராமல் உள்ளது. பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனை அடுத்த தேர்தலில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சரத்பவார் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு சிவசேனை ஆதரவளிக்கும். சமீபத்திய இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பின் அதன் கூட்டணிக்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

ஓரணி அவசியம்

இதனால், தேர்தல் சமயத்தில் பாஜக கூட்டணியான ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் மற்றும் ராம்விலாஸ்

பாஸ்வானின் லோக்ஜனசக்தியும் எதிரணியுடன் கைகோர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, பாஜகவிற்கு உண்மையிலேயே கடும் எதிர்ப்பு உருவானால் அதை எதிர்க்க எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வது அவசியம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் மூன்றாவது அணி தனித்து போட்டியிட்டால் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

எனவே, எதிர்கட்சிகளின் ஓரணி என்பது மூன்றாவது அணியா அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணியா என்பதை பாஜகவும் அறிய விரும்புகிறது. இதன் மீதான முடிவு தெரிந்தால் தான் அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியும். இதில், மாநில மற்றும் பிராந்தியக்கட்சிகள் அதிமான லாபம்பெறும் சூழல் அமையும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x