Published : 19 Mar 2018 02:22 PM
Last Updated : 19 Mar 2018 02:22 PM
மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து ஒலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் ஓட்டுநர்களுக்கு உரிய லாபத்தை அந்த நிறுவங்கள் உரியமுறையில் பங்கீட்டு தரவில்லை என கூறி அந்த நிறுவினங்களின் ஓட்டுநர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மும்பை நகரில் நடைபெறும் வேலை நிறுதத்திற்கு நவ நிர்மான் சேனா ஆதரவு தெரவித்துள்ளது. இதனால் மும்பை நகரில் ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி ஓடவில்லை. ஓலா, உபெர் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்திற்கு மும்பை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் உரிய நேரத்தில் டாக்ஸி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். அதுபோலவே கால் டாக்ஸி கட்டணமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்கள் சங்க தலைவர் சஞ்சய் நாயக் கூறியதாவது:
‘‘ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்கள் தங்கள் சொந்த நிறுவனக் கார்களையும், ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கார்களையும் வெவ்வேறு விதமாக அவர்கள் நடத்துகின்றனர். எங்களுக்கு உரிய பங்கு தரவில்லை. அந்த நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. கடன் வாங்கி கார் வாங்கிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும்’’ எனக்கூறினார்.
இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மும்பை போலீஸார் பரிசீலித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT