Published : 29 Mar 2018 07:35 AM
Last Updated : 29 Mar 2018 07:35 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய மருத்துவ கமிஷன் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு, நாடு முழுவதும் ஒரே பொதுத்தேர்வாக நடத்தப்பட உள்ளது. அந்த தேர்வே தேசிய தகுதித் தேர்வாகவும் கருதப்படும். இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மேலும் கடுகு எண்ணெயை தவிர்த்து இதர சமையல் எண்ணெய்களை வெளிநாட்டுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி அளித்தது. தேசிய திறன்சார் மேம்பாட்டு நிதியம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தை மறுசீரமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி தொடர்பான ஒருங்கிணைந்த திட்டம், ஊட்டச்சத்து மானியம், நகர திடக்கழிவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர் பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT