Published : 31 Mar 2018 04:10 PM
Last Updated : 31 Mar 2018 04:10 PM
இந்திய விமானப் படையில் பணியாற்றும் தன் கணவர் தனக்கு போன் மூலமாகவே தலாக் கூறிவிட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய விமானப்படைப் பிரிவில் பாக்தோராவில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி பாலியா காவல்நிலைய எல்லைக்குள் வசித்து வருகிறார்.
அவர் ஊடகங்களுக்கு நேற்று பேட்டியில் கூறியதாவது:
என் கணவர் சமீபத்தில் என்னை போனில் அழைத்தார். அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் எனக்கு விவாகரத்து தருவதாகவும் கூறி தொலைபேசியிலேயே ''தலாக் தலாக் தலாக்'' என்று மூன்று முறை சொன்னார்.
எங்கள் திருமணம் 2016 ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்றது. ஆனால் இதன்பிறகு எனது நேரத்தை பெரும்பாலும் மாமியாருடன்தான் செலவிட்டேன். மாமியாரும் ஒரு கார் மற்றும் ரூ.10 லட்சம் பணம் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.''என்று கூறிய அப்பெண் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட திருமணப் படங்களை பகிர்ந்துகொண்டார்.
பெண்ணின் தந்தை கூறுகையில், ''போனில் விவாகரத்து தெரவித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் செய்யச் சென்றிருந்தேன். ஆனால் போலீஸ் எங்கள் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.'' என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றம், விவாகரத்து செய்வதற்காக மூன்றுமுறை தலாக் கூறுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT