Published : 03 Mar 2018 09:01 AM
Last Updated : 03 Mar 2018 09:01 AM
சசிகலாவிடம் ரூ.2 கோடி பெற்ற புகார் தொடர்பாகபெங்களூரு சிறை அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜூலையில் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ''சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், சிறை முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றுள்ளனர்’’ என்று புகார் தெரிவித்தார்.
அதன்பின், சத்திய நாராயணராவ், ரூபா, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, “சிறையில் சில முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான். சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு படை அதிகாரிகளும், உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சிறைத்துறை டிஜிபி மேக்ரிக் ஆகியோரை சந்தித்து அடுத்தக்கட்ட விசாரணை தொடர்பாக விவாதித்தனர்.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை வட்டாரத்தில் விசாரித்த போது, ''முன்னாள் டிஐஜி ரூபாவின் அறிக்கை, பெங்களூரு வணிக வளாகத்தில் சசிகலாவை பார்த்ததாக கூறிய முத்து மாணிக்கம் என்பவரின் வாக்குமூலம் உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில், சத்தியநாராயண ராவ், கிருஷ்ண குமார், துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த 3 அதிகாரிகள் மீதும், ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன்படி வழக்குப்பதிவு செய்யப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் விரைவில் விசாரணை தொடங்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT