Last Updated : 08 Mar, 2018 03:35 PM

 

Published : 08 Mar 2018 03:35 PM
Last Updated : 08 Mar 2018 03:35 PM

உரிமை வென்றது: ஹாதியா - சபின் ஜஹான் திருமணம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளாவைச் சேர்ந்த ஹாதியா, சபின் ஜகான் ஆகியோரின் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பு தங்களின் விசாரணையைத் தொடரலாம் என்று இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா(வயது24). இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இது குறித்து போலீஸில் அசோகன் புகார் செய்ததோடு, கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த அகிலாவை சிலர் கடத்திச் சென்று இருப்பதாவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹாதியா(அகிலா) தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகிய ஹாதியா, ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தது, திருமணப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டது. அதேசமயம், ஹாதியாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 24 வயதான ஹாதியா தனது கணவரை சுயமாகத் தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஹதியா பெற்றோரின் வசம் இருக்கத் தேவையில்லை, கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹான் பின்னணி குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவின் கணவரின் பின்புலம் குறித்து விசாரிக்கலாம், ஆனால், எக்காரணம் கொண்டும் திருமணம் குறித்து விசாரிக்கக் கூடாது என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது.

இதற்கிடையே கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா, ஜஹான் திருமணம் செல்லாது என்பதை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹாதியாவின் கணவர் ஜஹான் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் முன் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஹாதியா, ஜஹான் திருமணம் சட்டப்படி செல்லும், இதை செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். ஹாதியா சட்டப்படி தனது திருமணத்தை பதிவு செய்து இருப்பதால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தங்கி இருக்கலாம். இவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் மாநில, மத்திய விசாரணை அமைப்புகள் அளிக்கக் கூடாது.

அதேசமயம், ஹாதியாவின் கணவர் ஜஹான் பின்புலம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்தத் தடையில்லை. ஆனால் அவர்களின் திருமணம் குறித்து எந்தவிதமான கேள்வியும் எழுப்பக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x