Published : 05 Mar 2018 12:06 PM
Last Updated : 05 Mar 2018 12:06 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுகாலை தொடங்கியது. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை இன்று காலை கூடியதும், எதிர்கட்சி எம்.பி.க்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி அந்தஸ்து அளிக்கும் விவகாரம் ஆகிய பிரச்சனைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
மக்களவையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி எம்பிக்கள், ரூ.12,600 கோடிக்கும் மேலாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டனர் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் தெலுங்கு தேசக் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT