Published : 05 Mar 2018 03:35 PM
Last Updated : 05 Mar 2018 03:35 PM
வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸை பலப்படுத்தி அங்கு மீண்டும் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது. மற்ற இரு மாநிலங்களிலும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி அக்கட்சி மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இத்தாலியில் தனது பாட்டியுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடுவதற்காக ராகுல் காந்தி அங்கு சென்று இருந்தார். இதனால் இரண்டு நாட்களாக வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸூக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வரும் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT