Published : 29 Mar 2018 04:41 PM
Last Updated : 29 Mar 2018 04:41 PM
அமைப்பு சாரா நிறுவனங்களில் சேரும் புதிய தொழிலாளர்களுக்கான இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு பங்குத் தொகையை இனிமேல் மத்திய அரசே செலுத்தவுள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயன்பெறவுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழிர்யர்களின் சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை பிடித்தம் செய்து வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக சேர்க்கப்படும் இந்த தொகையில், அவர்களின் பங்களிப்பாக 12 சதவீதம் செலுத்த வேண்டும். அதுபோலவே பணி வழங்கும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும்.
இந்நிலையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய இபிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தவுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியதாவது:
‘‘அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் புதிய தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய இபிஎப் பங்கு தொகையான 12 சதவீதத்தை இனிமேல் அரசே செலுத்தும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிமான தொழிலாளர்கள் பயனடைவர். இதன் மூலம் அரசுக்கு 6,500 கோடி ரூபாயில் இருந்து 10,000 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும்’’ எனக் கூறினார்.
இதேபோல் வட கிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில் ’’வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. அம்மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு 90 சதவீதமும், மாநில அரசுகள் 10 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி வருகின்றன. இனிமேல் நூறு சதவீத நிதியையும் மத்திய அரசே செலவு செய்யும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT